Sunday, March 17, 2013

வத்திக்குச்சி - பத்திகிச்சி

   
    பாலாவின் பரதேசிக்குப் போவதா அல்லது வத்திக்குச்சிக்குப் போவதா என குழப்பத்தில் ஆழ்ந்திருந்தோம்.இறுதியில் வத்திக்குச்சியை தேர்வு செய்தோம்.காரணம் இதுதான்.பரதேசி உலகத்தரமான படம். மனித உறவுகளைப் பற்றி கூறுகிறது.ஆயிரம் விருதுகள் வாங்கும் என்றெல்லாம் விமர்சனம் வந்தது.வழக்கம்போல சோகமான முடிவு என்றறிந்தேன்.வத்திக்குச்சியைப் பற்றி நல்ல விமர்சனமும் வந்திருந்தது, கெட்ட விமர்சனமும் வந்தது.ஆனால் பரதேசியை விட பொழுதுபோக்கான படம் என்பதில் சந்தேகமே இல்லாமல் இருந்தது. படம் முடிந்து சோகமாக வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வத்திக்குச்சிக்கு சென்றோம்.
 

    க்ரோம்பேட் வெற்றி தியேட்டருக்குதான் சென்றோம்.சென்னையில் பார்த்த படங்களில் பாதிக்கு  மேல் அந்த திரையரங்கினில்தான்  பார்த்திருக்கிறேன். வெற்றி தியேட்டர் எங்களுக்கு ஹோம் தியேட்டர் போலாகி விட்டது. சரி சரி ரொம்ப மொக்கை போடாத. விமர்சனத்துக்கு  வா  என்று நீங்கள் நினைப்பது என் காதில் விழுகிறது. இனி நேராக விமர்சனத்துக்கு செல்வோம்.

  படத்தின் கதையை  பற்றியும் காட்சிகளை பற்றியும் விமர்சனம் என்ற பெயரில்
 நான் இங்கு எழுத போவது இல்லை.
 அதனால் நீங்கள் தைரியமாக படிக்கலாம். ஒரே வாக்கியத்தில் சொல்வதானால் படத்தை ஒரு தடவ பாக்கலாம்.நன்றாக பொழுது
போகும். விளக்கமாக சொல்வதானால் வழக்கம் போல படத்தை வித்தியாசமாக   எடுத்திருக்கிறார்கள். பாடல்கள் நன்றாக உள்ளன. புதுமுக கதாநாயகனின் நடிப்பு பிரமாதம். அஞ்சலி அமுல் பேபி போல வந்திருக்கிறார். கதாநாயகன் புது முகமாக இல்லாமல்
கார்த்தியை போன்ற ஒருவராக இருந்தால் படம் சூப்பர் ஹிட் என்பதில் சந்தேகமே இல்லை எனக்கு. இப்பவும் கூட படம் ஹிட் ஆகலாம். மக்களின் ரசனையை பற்றி தெரியவில்லை. படத்தில் சில இடங்களில் லாஜிக் பார்க்கவில்லை. சில   இடங்களில் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லாத லாஜிக்கையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அதில் நான் அசந்து விட்டேன். அது என்ன லாஜிக் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படம் முடிந்து சோகமாக வர மாட்டீர்கள் என்பது  உத்திரவாதம். இது என் கருத்து. தங்கள் கருத்தையும் தெரிவியுங்கள்  

Sunday, February 13, 2011

"பயணம்" ஒரு அனுபவம்


வணக்கம் நண்பர்களே! நேற்று "பயணம்" திரைப்படத்திற்கு சென்றிருந்தேன். அதை பற்றி ஒரு பதிவு எழுதியே ஆக வேண்டும் என்ற அளவுக்கு பாதித்தது. இப்பதிவு அப்படத்தின் விமர்சனம் அல்ல. படம் பார்த்த என் அனுபவம்.

எங்கிருந்து ஆரம்பிப்பது? சரி. நான் பிரகாஷ்ராஜின் ரசிகன். அவர் நடிப்புக்கும் அதற்கும் மேலாக அவரின் தயாரிப்புக்கும்.அவர் படங்களான "மொழி", "அபியும் நானும்" போன்ற படங்கள் என்னை மிகவும் ஈர்த்தன."அழகிய தீயே" பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.அதுவும் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் கூறினர்.உங்களுக்கு படங்கள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இவைகள் அனைத்தும் நல்ல படங்கள் என்று ஒத்துகொள்வதில் எவ்வித மாற்று கருத்தும் உங்களுக்கு இருக்காது என நம்புகிறேன்.

இப்படி இருக்கையில் பொங்கலின் போது பிரகாஷ்ராஜ் மற்றும் ராதா மோகனின் பேட்டி பார்த்து "பயணம்" என்ற படம் வரப்போவதை அறிந்தேன். எப்போது வரும் என்று அவர்கள் சொல்லவில்லை. காத்துக்கொண்டிருந்தேன். வெள்ளிகிழமை வெளியானதும் அன்று வேலை இருந்ததால் சனிக்கிழமை காலையிலேயே சென்று விட்டேன் சத்யம் தியேட்டருக்கு.

போனவுடன் ஒரு பயம். அதிக எதிர்பார்ப்பு என்பது சரியில்லை.ஏனெனில் சமீபத்தில் சில படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புடன் சென்று அவைகள் நன்றாக இருந்தும் அவைகளை ரசிக்க முடியவில்லை. காரணம் அதிக எதிர்பார்ப்பு. ஆனால் இந்த படம் அவ்வாறு என்னை ஏமாற்றவில்லை. அதிக எதிர்பார்ப்புடன் சென்றும் இந்த படம் எதிர்பார்ப்புக்கும் மேலாக இருந்தது.

ராதா மோகன் பேட்டியில் கூறியது போல இந்த படம் ஒரு அனுபவமாகவே இருந்தது.படம் ஒரு த்ரில்லர் ஆக இருந்தாலும் காட்சிகள் முழுக்க ஒரு மெல்லிய, இல்லை இல்லை ஓர் அற்புதமான நகைச்சுவை கூடவே இருந்தது. படத்தில் நாகார்ஜுனா கதாநாயகன் என்று தெரிந்தாலும்,உண்மையான கதாநாயகன் கதையும் திரைக்கதையும் தான். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாதி முழுக்க சீட்டின் நுனியிலேயே உக்கார வைக்கிறார்கள். ஆனால் அப்பவும் சிரிக்க வைப்பதுதான் உச்சகட்டம்.படம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. எங்கேயும் எனக்கு தெரிந்து தவறு செய்யவில்லை.

சமீப காலமாக படங்களுக்கு சில வலைதளங்களில் அவர்கள் போடும் நட்சத்திரங்களை வைத்து சென்று கொண்டிருந்தேன். ஆனால் அது தவறு என தெரிந்து கொண்டேன். இவ்வளவு அருமையான படத்திற்கு குறைந்த நட்சத்திரங்களே கொடுத்திருந்தார்கள்.ரசிகர்களாகிய நாம் பார்த்து நாம்தான் நட்சத்திரங்களை கொடுக்க வேண்டும்.

சினிமாவின் ரசிகர்கள் எல்லோரும் பார்க்க வேண்டிய படம். படம் பிடிக்கவில்லை என்று ஒருவராலும் கூற முடியாது என உறுதியாக கூறுவேன்.

பொறுமையாக எனது பதிவை படித்த உங்களுக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.

Saturday, February 5, 2011

SMS மொக்கைகள்


தேர்வு கண்காணிப்பாளர்: ஏன்டா எக்ஸாம் எழுதும்போது காதுல வாட்ச வச்சுட்டு இருக்க ?

மாணவர்: "காலம் பதில் சொல்லும் " அதனால்தான் சார்
--------------------------------------------------------------------------------------------

LKG பையன் போனில்:ஹலோ, இன்னைக்கு என் குட்டி பையன் ஸ்கூலுக்கு வர மாட்டான். ஏன்னா அவனுக்கு உடம்பு சரியில்லை.

ஆசிரியர்: சரி. நீங்க யார் பேசறீங்க?

பையன்: நானா..... நா... நா... எங்க அப்பா பேசறேன்.

ஒன்னுமே தெரியாத student கிட்ட Question paper தராங்க.எல்லாம் தெரிஞ்ச Teacher கிட்ட Answer paper தராங்க. என்ன கொடும சார் இது....
-------------------------------------------------------------------------------------------

இளைஞர்களுக்கு 9 அறிவுரைகள்:
1.எந்த பெண்களையும் காதலிக்காதீர்கள்
2.பெற்றோரிடம் பொய் கூறாதீர்கள்
3.யாரிடமும் கோபப்படாதீர்கள்.
4.எதிரிகளிடம் மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்
5.நண்பர்களிடம் நன்றி கூறுங்கள்.
6.பள்ளி/ கல்லூரிக்கு மட்டம் போடாதீர்கள்.
7.நள்ளிரவு வரை ஊர் சுத்தாதீர்கள்
8.எப்போதும் நன்றாக படியுங்கள்.
9.மேல் சொன்ன எட்டு அறிவுரைகளையும் பின் பற்றினால் உடனே செத்து விடுங்கள்.

முதல் எட்டு அறிவுரையை நீ செய்ய மாடேய்ன்னு தெரியும் . ஏன்னா நீ என் "நண்பேண்டா"

---------------------------------------------------------------------------------------------

ஒருவனிடம் 200 ரூபாய் உள்ளது. அவன் 4 பிச்சைகாரர்களுக்கு தலா 100 ரூபாய் தருகிறான்.
இந்த கணக்கு சரியா? தப்பா?



தப்பில்ல




நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.
----------------------------------------------------------------------------------------------

ஒரு குழந்தையின் காதல் கவிதை:
அவள் பாதம் பட்ட இடத்திற்கெல்லாம் முத்தமிட்டேன். ஆனால் அவள் சென்று முறையிட்டால் என் மம்மியிடம்

" ஆண்ட்டி உங்க பையன் மண்ணு திங்கறான்."

----------------------------------------------------------------------------------------------------

கல்யாணத்துக்கு முந்தைய காதல்:
" அன்பே நீ இன்றி நான் இல்லை... நான் இன்றி நீ இல்லை"

கல்யாணத்துக்கு பின்பு:
" மவளே! ஒன்னு நீ இருக்கணும் இல்ல நான் இருக்கணும்."

Thursday, February 3, 2011

மீண்டும் ஓர் அறிமுகம்


வணக்கம் நண்பர்களே! மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.மீண்டும் இந்த பதிவுலகத்திற்கு வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. நவம்பர் 14, 2010 இல் தான் பதிவுலகில் நுழைந்தேன். எழுதும் ஆர்வம் மட்டுமே உண்டு. ஆனால் எவ்வாறு எழுதுவது, நாம் எழுதியதை எல்லோரும் படிப்பார்களா எழுத்து நடை சரியாக வருமா போன்ற சந்தேகங்கள் என்னை தடுத்து வந்தன. சரி. முயற்சி செஞ்சுதான் பார்ப்பமே என்று எழுத ஆரம்பித்தேன்.ஒவ்வொரு பதிவின் போதும் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வந்தேன், வருகிறேன்.

இந்த நிலையில்தான் திடீரென எனது வலைப்பூவை யாரோ misuse செய்கிறார்கள் என்று கூறி அழித்து விட்டார்கள். நான் மனமுடைந்து விட்டேன். பிறகு யாருடைய வலைபதிவையும் பார்க்கவில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று தான் பலரது வலைபூக்களை பார்த்தேன். எடிசன் கதை ஞாபகத்திற்கு வந்தது. சரி நம்முடைய எல்லா தவறுகளும் மறைந்து விட்டன. புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்கலாம் என்று blogger ஐ திறக்கும் போதுதான் மீண்டும் இந்த வலைப்பூ இருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். இதோ எழுத ஆரம்பித்து விட்டேன்.

நண்பர்களே! நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ இது போன்ற வலைப்பூ மறையும் அனுபவம் கொண்டதுண்டா? அதற்க்கான காரணம் தெரிந்தால் சொல்லுங்கள். வரும் காலங்களில் இது நிகழா வண்ணம் காத்து கொள்ள உதவியாய் இருக்கும்.

அப்புறம் இந்த வலைப்பூ எழுதாத காலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்மீண்டும் வந்து விட்டது. 2007 வருடம் எழுதியிருக்கிறேன். அதன் பிறகு இந்த 2011 வருடம் தான் மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன். நாம் வாழும் வாழ்க்கை இல்எந்த அடையாளம் பதிக்க முடியா விட்டாலும் நமது எழுத்துக்களையாவது விட்டுசெல்கிறோம் என்ற மகிழ்ச்சி கொஞ்சம் உள்ளது. குறைந்தது இந்த ஒரு வருடம்முழுமையாகவாவது நாட்குறிப்பு எழுத வேண்டும் .


Sunday, December 12, 2010

கண்டுபிடியுங்க பார்ப்போம் !

நான் நண்பரிடம் ஒரு விளையாட்டு விளையாடினேன். அவரிடம் ஒரு எண்ணை நோட்டு புத்தகத்தில் எழுதுமாறு கூறினேன் . நான்கு இலக்கங்கள் வரை எழுதலாம் என்றேன்.

அவரும் எழுதினார் (4569). பிறகு அதை வாங்கி ஒரு எண்ணை அந்த பக்கத்தின் இறுதியில் அதன் நேர் கீழாக எழுதினேன்(24567).

பிறகு அவரை வேறு ஒரு எண்ணை அவர் முதலில் எழுதிய எண்ணின் நேர் கீழாக எழுத சொன்னேன் . அவர் எழுதிய உடனேயே (1232) நானும் ஒரு எண்ணை (8767) அதன் கீழ் எழுதினேன்.

மீண்டும் ஒரு எண்ணை நான் எழுதிய எண்ணின் கீழ் எழுத சொன்னேன் . எழுதினார் (758). பிறகு நான் உடனேயே மற்றொரு எண்ணை அதன் கீழ் எழுதினேன் (9241) .

உடனே எழுதினேன் என்பதை கவனிக்க வேண்டும். பிறகு அந்த ஐந்து எண்களையும் கூட்டசொன்னேன். கூட்டிய பின் ஆச்சர்யபட்டு போனார்.
ஆம். நான் முதலில் பக்கத்தின் எழுதிய எண் தான் அது. இங்கேகவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் நான் மூன்று எண்களை எழுதிய போதும் ( ஒரு விடை மற்றும் இரண்டு எண்கள் ) நேரம் எடுக்காமல் உடனே எழுதினேன் என்பது தான்.

என்னால் எவ்வாறு அப்படி எழுத முடிந்தது என்பதை கண்டுபிடியுங்க பார்ப்போம். கண்டுபிடிக்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு உண்டு.

Wednesday, December 8, 2010

அன்பை எதிர்பார்க்காதீர்

இன்று நான் வாழ்வை அழகாக்குவதற்க்கான வழி ஒன்றினை என் தோழர் ஒருவரிடம் இருந்து கற்று கொண்டேன் . அதுதான் "அடுத்தவரிடம் எதையும் எதிர் பார்க்காதே! வாழ்க்கை நன்றாக இருக்கும் ". எவ்வளவு சத்தியமான வாக்கு இது. நாம் பொதுவாக நம் நண்பரிடம் எதையாவது எதிர் பார்ப்போம். உதாரணமாக அவர் கிளம்பும்போது நமக்காக காத்திருக்க வேண்டும், எதையாவது புதிதாக செய்யும் போது நம்மிடம் சொல்ல வேண்டும் போன்றவை. ஆனால் எந்த காரணத்தினாலோ அவர் அதை செய்ய வில்லை என்றால் நமக்கு கிடைப்பது ஏமாற்றமே. அதனால் அவர் மீது கொண்ட அன்பு நாளாக நாளாக குறைந்து விட கூடிய வாய்ப்பு மிக அதிகம் . அதனால் வருத்தம் நமக்கு மட்டுமல்ல, அவருக்கும் தான். இப்படி அழகாய் போய் கொண்டிருக்கும் வாழ்க்கையை நமக்கு நாமே சோக மயமாக்க காரணம் நாம்தான்.நம்முடைய எதிர்பார்ப்புதான்.

நான் இவ்வளவு அன்பு தருகிறேன் அதனால் இவ்வளவு அன்பு எதிர்பார்க்கிறேன் என்பது எவ்வளவு வேடிக்கையான விஷயம். இது என்ன வியாபாரமா? நாம் எப்போதுமே கொடுப்பவர்களாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கலாம். எதையும் எதிர்பார்க்காதபோது பதிலுக்கு அன்பு கிடைத்தால் அதை போனசாக எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் அது கிடைக்க வில்லை என்றால் அதை நினைத்து வருந்த கூடாது. இன்னும் அதிகமாக அன்பு செலுத்த துவங்க வேண்டும். இந்த வாழ்க்கை என்பது நமக்கு கிடைத்த வாய்ப்பு. அதை நாம் முழுவதும் மகிழ்ச்சியாக நுகர வேண்டும். ஒரு விஷயம் நமக்கு வருத்தம் தருகிறது , அதற்க்கு நாம்தான் காரணம் என்றால் அதை மாற்றி கொள்ள தயங்க கூடாது.

அதனால் அடுத்தவரிடம், குறிப்பாக நாம் அன்பு செலுத்துபவரிடம் , நம் மீது அன்பு செலுத்துபவரிடம் எதையும் , குறிப்பாக அன்பை எதிர் பார்க்க கூடாது. மாறாகஅதை வாரி வழங்க வேண்டும். அதனால் மற்றவருக்கு சந்தோசமோ இல்லையோ நமக்கு சந்தோசமாக இருக்கும். வாழ்க்கை அழகாகும். நம் வாழ்கையும் நம் சுற்றி இருப்பவர் வாழ்கையும் தான். இதை எனக்கு ஒரு வார்த்தையில் உணர்த்திய என் நண்பருக்கு நன்றி.

Sunday, November 28, 2010

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!

                   சென்ற வாரம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு சென்றிருந்தேன். எதாவது புத்தகம் வாங்கலாம் என்று புத்தக கடையை பார்த்தபோது அந்த புத்தகம் கண்ணில்பட்டது.
புத்தகத்தின் தலைப்பு " ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!". விஜய் டிவி நீயா நானா கோபிநாத் அவர்களின் படம் போட்டு இருந்தது.தலைப்பையும் அவர் படத்தையும் பார்த்ததும் அதை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று தோன்றியது. வாசகர்களின் சைகாலஜியை நன்றாக தெரிந்து இந்த தலைப்பை இட்டுக்கிறார் கோபி. விலை 60 ரூபாய் என்றார்கள். வாங்கி கொண்டேன்.


                  புத்தகத்தை புரட்டினால், அடா அடா அடா ! அவ்வளவு அருமையாக உள்ளது. வாழ்கையை எவ்வாறு அழகாகவும் இனிமையாகவும் வாழ வேண்டும் என்ற கேள்விக்கான விடை இந்த புத்தகம். எளிய தமிழ்.பொருத்தமான படங்கள். அறிவுரை என்ற மருந்தை மிக மிக இனிப்பாக பரிமாறியிருக்கிறார் கோபி.


                          இவரின் பெருமை பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்காது என நினைக்கிறேன். இவரை பற்றி படித்தவுடன் நம் கோபி இவ்வளவு விருதுகளுக்கு சொந்தமானவரா என வியந்தேன். அவ்வளவு விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார்.புத்தகத்தை மிக வேகமாக படித்து முடித்து விட்டேன். அதன் கருத்துகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. நீங்களும் இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். நான் இவருடைய பிற புத்தகங்களை படிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.